போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய ஆசிரியை மற்றும் கணவர் கைது!

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர், 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, கணவரிடமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், ஆசிரியையிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகளில், இவர்கள் ‘மொதர மயூர’ எனும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனுடன் தொடர்புடையவர்கள் என்பதும், நீண்டகாலமாக இக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியை, தான் தனியார் கல்வி நிறுவனமொன்றில் சட்டப் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், அதன் கல்விச் செலவுகளை ஈடுகட்டவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கணவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.