22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில்!

தியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.
‘அத தெரண’ வினவிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பதிலளித்த நீதி அமைச்சர், அன்றைய தினமே நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன், இதற்கு ஆரம்பக்கட்டத்திலிருந்தே முன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுத்தது.
இதற்கிடையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதும், இந்தத் திருத்தத்தைச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருந்தார்.
இத்தகைய பின்னணியில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயகார ‘அத தெரண’விடம் தெரிவித்தார்.
இதற்கு இணையாக நீதிமன்ற ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலமும் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையின் பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு, அதை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.