பலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்மாந்துறை மக்கள்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், “FREE PALESTINE” என்ற தொனிப்பொருளில் அமைதியான “துஆ” பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், நேற்று வெள்ளிக்கிழமை (19) ஹிஜ்றா ஜூம்ஆ மஸ்ஜித் முன்றலில் இடம்பெற்றது.
இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தின் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனை எதிர்த்து, பலஸ்தீனருக்கு ஆதரவாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மகஜர், பொதுமக்களிடம் வாசித்து காட்டப்பட்டதுடன், பிறகு குறித்த மகஜரை சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா அவர்களிடம் நேரில் கையளிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில், நம்பிக்கையாளர் சபை உப தலைவர் அல்ஹாஜ் கே.எம்.கே.ஏ.ரம்சீன் காரியப்பர், மஜ்லிஸ் அஷ்ஷுறா தலைவர் அல்ஹாஜ் டாக்டர் ஏ.எம்.எம்.ரஷீத், ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எல்.எச்.பசீர் மதனி, பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபர், மற்றும் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.