16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை?

இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுவர்களை சமூக ஊடகங்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்த யோசனை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் செயற்திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கமும், ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.