மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இந்தியா வலியுறுத்தல்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இச்சந்திப்பின்போது, நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பு விதிகளை முழுமையாக அமுல்படுத்துமாறும் இந்தியத் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பம், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் அடையாளத் திட்டம் உள்ளிட்ட பல்துறை ஒத்துழைப்புகள் குறித்தே தமது அறிக்கையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விவரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான உதவிகள், திருகோணமலை எரிசக்தி மையம், காங்கேசன்துறை துறைமுக நவீனமயமாக்கல், மீனவர் பிரச்சினை மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.