தோட்டத் தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

மலையகத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் வேதனம், அவர்களின் நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்வதற்குப் போதுமானதாக இல்லை என முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த வேதனப் பிரச்சினை நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ளதாகவும், அரசாங்கம் ஒரு நாளைக்கு 200 ரூபாயும், நிறுவனங்கள் 200 ரூபாயும் சேர்த்து 400 ரூபாயையும் தருவதாகக் கூறினாலும், அரசாங்கம் மாறும்போது இந்தத் தொகை முறையாகக் கிடைக்கும் என்பதில் உறுதியற்ற தன்மை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்குத் தோட்டங்களைப் பிரித்துக் கொடுத்து, சிறு தோட்ட உரிமையாளர் முறையைக் கொண்டுவர வேண்டும் அல்லது குத்தகைக்கு வழங்கி கொழுந்துப் பறிப்புக் கூலியை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வருவதாகவும், தேர்தல் முடிந்ததும் தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.




