மன்னார் சிறுவர் பூங்காவில் “தானத்தில் சிறந்தது கல்வி” நிகழ்வு!

மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவில் நேற்று (04) மாலை “தானத்தில் சிறந்தது கல்வி” எனும் தொனிப்பொருளில் முன்னாள் மாவட்ட வேகநடை விளையாட்டு வீரர் பிரதீபன் தலைமையில் விசேட நிகழ்வு நடைபெற்றது.
மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவிற்கு வார விடுமுறை நாட்களில் வருகை தரும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, மாதிரி வினாத் தாள்களை இலவசமாக வழங்கும் திட்டம் இதன் மூலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் மாதிரி வினாத்தாள்கள் தொடர்ந்து வழங்கப்படவுள்ளதுடன், 2027ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி வளங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் பரீட்சைத் தயார் படுத்தலுக்கு பங்களிப்பதே இந்நிகழ்வின் பிரதான நோக்கமாகும்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் நகரசபை தலைவர் டானியல் வசந்தன் மற்றும் இதய தொழில்நுட்பவியளாலர் நிறோன்,உளநல சமூக உத்தியோகத்தர் ரொமி யூலன் மற்றும் குறைதீர்ப்பு ஆலோசகர் கூஞ்ஞ மற்றும் G.L.P கட்டிட நிர்மாண நிறுவன தலைவர் லிங்கேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர் .
குறித்த நிகழ்வில் கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று கொண்ட மாணவன் ஆத்விக் மெத்யூ வினால் அடுத்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




