ஜனாதிபதியின் நிலைப்பாடு மாற்றமா ? – சாணக்கியன் எம்.பி கேள்வி !

நேற்றைய தினம் 21.10.2025 இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது மட்டக்களப்பு மாவட்ட பேரிடர் பாதுகாப்பு மையங்கள் கட்டுமானம் – மற்றும் திட்ட முன்மொழிவு 2025 பற்றியதாக இருந்தது.
இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்,
மட்டக்களப்பு மாவட்டம் அடிக்கடி கடுமையான வெள்ளப்பெருக்கால் வருடாவருடம் பாதிக்கப்படுகிறது. இதனால் இடம்பெயரும் மற்றும் வெளியேற்றப்பட்ட மக்களை தங்க வைப்பதில் பெரும் சவால்கள் உருவாகின்றன. குறிப்பிட்ட பேரிடர் பாதுகாப்பு மையங்கள் இல்லாதநிலையில், மக்கள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவ்விடங்களில் போதுமான வசதிகள் இல்லாததால், இது தொடர்ந்து பொருளாதார இழப்புகளையும் மக்களுக்குபாரிய சிரமங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக் காலங்களில் பாதுகாப்பான மற்றும் எளிதில் அணுகக்கூடிய தங்குமிடங்கள் மிகவும் அத்தியாவசியம் உடையவை. வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் அமைப்பது முக்கிய நிவாரணமாக இருக்கும். எனவே, இம்மையங்களை அமைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கீழே முன்னுரிமை அளிக்கப்பட்ட இடங்கள் திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வேற்றுச்சேனை, போரதீவுப் பற்று. பிரம்படித்தீவு, கோரளைப் பற்று தெற்கு. எருவில் கோட்டை மேடு, மண்முனை தெற்கு எருவில் பற்று. பண்டாரிவெளி மண்முனை மேற்கு.
மேலும், இதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் மாவட்ட அரச அதிபரின் வேண்டுகோள் கடிதமும் கையளிக்கப்பட்டது.
திருகோணமலையில் மற்றும் கிழக்கு மாகாணம் முழுவதிலும் முற்றாக அழியும் நிலையில் உள்ள கனிய வளங்கள், கனிய வள அகழ்விற்கு முதன்முறையாக NPP அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஓர் தனியார் நிறுவனத்துக்கு அரசு திருகோணமலை குச்சுவெளி கடற்கரை பிரதேசத்தில் கனிய வள அகழ்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவ் இடமும் வளமும் மக்களும் பாதிக்கப்பட போகின்றார்கள். ஏற்கனவே ஜனாதிபதி இவ்வாறான கனிய வள அகழ்வுக்கு எதிராக 2023 அளவில் பாராளுமன்றத்தில் எதிராக உரையாற்றி இருந்தார். தற்சமையம் அவர்களே அதற்குரிய அனுமதியினை அளித்துள்ளார்கள்.
என அவர் தனது பாரளுமன்ற உரையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.