இலங்கை சுங்கத்தின் வருமானம் 765.7 பில்லியனாக உயர்வு!

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026 ஏப்ரல் 16ஆம் திகதி வரை இலங்கை சுங்கம் 765.7 பில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை விட 71.8 பில்லியன் ரூபா மேலதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை சுங்கம் 2025 ஆம் ஆண்டில் தனது வரலாற்றில் மிக உயர்ந்த வருமானமான 2,557.5 பில்லியன் ரூபாவைப் பதிவு செய்திருந்தது. அதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்காக 2,207.0 பில்லியன் ரூபா வருமான இலக்கு அதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முனைய இயக்குநர்களின் (Terminal operators) தகவல்படி, மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக இலங்கையூடாக மீள் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் அளவு அதிகரித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார். இதன் விளைவாக, இறுதி இலக்குகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் அதிகளவிலான கொள்கலன்கள் உள்ளூர் துறைமுகங்களில் இறக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“முதலில் மத்திய கிழக்கிற்கு நேரடியாக அனுப்பப்படவிருந்த கொள்கலன்கள், தற்போது இலங்கையில் இறக்கப்பட்டு, பின்னர் அந்தந்த இடங்களுக்குத் திருப்பி விடப்படுகின்றன,” என்று அவர் விளக்கமளித்தார்.