2026 September 17, Thursday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
யோஷித ராஜபக்ச–வசந்த கரன்னகோடா வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில்குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!IPL ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது!பயணிகள் அசௌகரியம் – கோரிக்கைகளில் உடனடி கவனம் கோரிக்கை!காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரிக்கு பலத்த மழை சாத்தியம்!2 மில்லியன் டொலர் விசாரணையில் நாமல் மீது நீதிமன்ற உத்தரவு!தமிழரசுக் கட்சி முடிவுக்கு எதிராக அரியநேந்திரன் தரப்பு சட்டப் போராட்டம்!மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கும்!

குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!

உலகம்September 17, 2026 · 1 hour முன்5
குடியேற்ற அழுத்தம் அதிகரிப்பு – மாணவர் விசாவில் கடுமை!

சர்வதேச மாணவர்கள் கல்வி பயிலும் காலத்தில் அவர்களின் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வருவதைத் தடுக்கவும், தற்காலிக குடியேற்ற விசாக்களை மாற்றுவதற்கான விதிகளை இறுக்கமாக்கவும் அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது சுமார் 300,000 ஆக இருக்கும் நிகர வெளிநாட்டு குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 2028 ஆம் ஆண்டளவில் 225,000 ஆகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தற்போதைய நிலவரப்படி, சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் அவுஸ்திரேலியாவில் பணிபுரிய முடியும். 

இருப்பினும், அவர்கள் பணிபுரிய அனுமதிக்கப்படும் மணித்தியாலங்களின் எண்ணிக்கை மாணவரின் பாடநெறியைப் பொறுத்து மாறுபடும். 

அத்துடன், மாணவர்கள் 18 வயதிற்குட்பட்ட தங்கி வாழும் குழந்தைகளையும் அழைத்து வர முடியும். 

அவுஸ்திரேலியர்களுக்கு மூச்சுவிடும் இடைவெளியை வழங்குவதற்காக, மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையை 750,000 ஆல் குறைக்கவுள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்புகளில் எழுச்சி பெற்று வரும் தீவிர வலதுசாரி ‘வன் நேஷன்’ (One Nation) கட்சி இந்த வாரம் தெரிவித்த நிலையிலேயே அரசாங்கத்தின் இந்நடவடிக்கை வரவுள்ளது. 

தனது அணுகுமுறையை அவுஸ்திரேலியா முதன்மை என விவரிக்கும் ‘வன் நேஷன்’ கட்சியின் கொள்கைகள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. 

ஆரம்ப மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 130,000 ஆகக் கட்டுப்படுத்த இலக்கு வைப்பதாகவும், இந்தத் திட்டம் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

சுமார் இரண்டு வருட கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பெப்ரவரி 2022 இல் அவுஸ்திரேலியா தனது எல்லைகளை மீண்டும் திறந்ததைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் தற்காலிக திறமை வாய்ந்த தொழிலாளர்களால் அவுஸ்திரேலியாவின் குடியேற்றச் சேர்க்கை கணிசமாக அதிகரித்தது. 

இருப்பினும், குடியேற்றவாசிகளின் வருகை வீடமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளதுடன் சமூக ஒற்றுமையைப் பாதித்துள்ளது என விமர்சகர்கள் வாதாடிய போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளது. 

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜூன் 30, 2025 இல் முடிவடைந்த ஆண்டில் நிகர வெளிநாட்டு குடியேற்றம் மொத்தம் 306,000 ஆக இருந்ததுடன், அதில் பாதியிற்கும் அதிகமானோர் சர்வதேச மாணவர்களாவர். 

நிகர குடியேற்றம் 2023 இல் 518,000 ஆக உச்சத்தை எட்டிய பின்னர், 2024 இல் 429,000 ஆகக் குறைந்தமை குறிப்பிடத்தக்கது.