மழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளதுடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கடற்பரப்புகளைப் பொறுத்தமட்டில், சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன், தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.
எனினும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரித்து மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து ஓரளவுக் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது