வாழ்க்கைச் செலவை குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – இம்ரான் மகரூப்

நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இன்று (02) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும், அதற்கேற்ப பொதுமக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக பல குடும்பங்கள் மூன்று வேளை உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக குறைந்த சம்பளம் பெறும் அரச ஊழியர்கள், பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் குடும்பத்தின் அன்றாட உணவுச் செலவுகளைச் சமாளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலை தொடருமானால், பிள்ளைகளின் உணவுத் தேவைகளைப் பெற்றோரால் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுடன், எதிர்காலத்தில் போசாக்குக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இம்ரான் மகரூப் எச்சரித்தார்.
பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




