பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் ஆரம்பம்!

பல்கலைக்கழகங்களில் விசேட தேவையுடையோர் பிரிவின் கீழ் அனுமதி பெற்று கல்வி பயிலும் மாணவர்களுக்கான விசேட நிதியுதவி வழங்கும் திட்டமொன்றை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட 370 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக, நேற்று அலரி மாளிகையில் நடைபெற்ற ‘சரஸ்வி திரியோ அபிமான் 2026’ நிகழ்வின் போது 236 மாணவர்களுக்கான காசோலைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவையுடையோர் என வகைப்படுத்தப்பட்டு, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் உயர்கல்வியைத் தடையின்றித் தொடர ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இந்த விசேட நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.