இலங்கை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் சீருடைத் துணி நன்கொடை

இலங்கையின் அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் சுமார் 4.18 மில்லியன் மாணவர்களுக்கான 2027ஆம் ஆண்டுக்குரிய முழுமையான பாடசாலை சீருடைத் துணிகளைச் சீன அரசாங்கம் முற்றிலும் இலவசமாக நன்கொடையாக வழங்கவுள்ளது. இதற்கமைய, 10.820 மில்லியன் மீட்டர் அளவிலான சீருடைத் துணியை வழங்குவதற்கான உத்தியோகபூர்வ உடன்படிக்கைச் சான்றிதழ்கள் பரிமாற்றம் நேற்று (15) பத்தரமுல்லையிலுள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷென்ஹொங் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ ஆகியோருக்கிடையில் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சான்றிதழ்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆலோசகர் உட்பட கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.