பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடுத்த சோதனை – IMF குழு இலங்கையில்!

நாட்டின் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இன்று (10)இலங்கை வரவுள்ளது.
அந்த குழுவானது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து இந்த மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்த விஜயம் குறித்து இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் இவான் பாப்பஜோர்ஜியோ தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைந்த 7வது மதிப்பாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டின் உறுப்புரை IV ஆலோசனைகள் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் குழு தமது அறிவிப்பை வௌியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்கை வகுப்பாளர்களின் நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்துவதற்குமான முயற்சிகளைத் தொடரும் நிலையில், பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தை இந்த விஜயத்தின்போது தூதுக்குழுவினரால் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்படவுள்ளது.
அதேவேளை, நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அந்த குழுவினர் ஆராய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாப்பஜோர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு முன்னதாக 2026 ஜூன் 24 முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பில் மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்தே, இந்த செப்டெம்பர் மாத விஜயம் இடம்பெறுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




