2026 September 10, Thursday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 33°
LIVE
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத்தை இழந்த இலங்கை – 20 மில்லியன் டொலர் வருவாய் பாதிப்பு!சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடுத்த சோதனை – IMF குழு இலங்கையில்!மேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் மழை; மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!இந்து சமுத்திர பாதுகாப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்!பொறியியல் பிரிவு தலைவரிலிருந்து CEO பதவிக்கு விபுல் மிஸ்ரா!

ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!

உலகம்September 10, 2026 · 43 minutes முன்2
ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் திருப்பங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் சிரிக் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தங்களுடன் ஏவுகணைத் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மினாப் மாகாணம் மற்றும் குஷெம் தீவு ஆகிய பகுதிகளிலும் இந்தத் தாக்குதல்களின் தாக்கம் எதிரொலித்துள்ளதாக அந்தநாட்டு அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள போதிலும், வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதிப் பாதுகாப்பு வெளிநாட்டு சக்திகளின் தலையீடு இல்லாமல், கடற்கரை நாடுகளின் ஒத்துழைப்புடன் மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

பிராந்திய உரையாடலுக்கும், நிலையான பாதுகாப்புக்கும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் தெஹ்ரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீதான போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்றும், அதன் பின்னரே எண்ணெய் விலை வீழ்ச்சியடையும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரானுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், தங்களின் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய ஈரான் அனுமதி மறுத்த விவகாரத்தில், ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முறைப்பாடளிக்கும் தீர்மானம் சர்வதேச அணுசக்தி முகவரகத்தால் (IAEA) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்குச் சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், இதுவொரு இரட்டை வேடக் கொள்கை என ஈரானின் முதல் துணை ஜனாதிபதி மொஹமட் ரேசா அரேஃப் கடுமையாகச் சாடியுள்ளார்; மேலும் அமைதியான நோக்கங்களுக்காக ஈரான் தொடர்ந்து அணுசக்தியைப் பயன்படுத்தும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மறுபுறம், வளைகுடாவின் முக்கியப் போக்குவரத்து வழிகளில் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதால், பல வணிகக் கப்பல்கள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானிய கடற்படை வர்த்தகப் போக்குவரத்து அமைப்பு (UKMTO) எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, ஜெருசலேமிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேல் எடுத்த முடிவு வருந்தத்தக்கது என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் எட் மிலிபந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், லெபனான் எல்லைப் பகுதியில் ஜூன் மாத ஒப்பந்தத்தை இஸ்ரேல் சுமார் 7,700 முறை மீறிவிட்டதாக லெபனான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளதுடன், தெற்கு லெபனான் மீது தொடர் வான்வழித் தாக்குதல்களும் அரங்கேறி வருவது மத்திய கிழக்கின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.