தமிழ் பட்டிமன்றத்தின் அடையாளம் இனி நினைவுகளில்!

ரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்று (11) காலமானார்.
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார்.
அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார்.
இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்து அவற்றின் சுவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
‘பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார்.
மேலும், ‘அவர்கள் கண்ட ராமன்”, ‘இவர்கள் நோக்கில் கம்பன்”, ‘கம்பவனத்தில் ஓர் உலா”, ‘கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார்.
மதுரை கம்பன் கழகத்தின் திங்கள் சொற்பொழிவுகளையும் ஆண்டுதோறும் தொகுத்து வெளியிட்டு வருகிறார்.
தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ‘முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.



