இறக்குமதி வரி முறையில் 4 புதிய பிரிவுகள்!

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அதற்கமைய கட்டம் கட்டமாக இந்த செஸ் வரிகளை நீக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதிப் பொருட்கள் மீது செஸ் வரி விதிக்கப்பட்ட போதிலும், பல உள்நாட்டுத் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களையே தங்கியுள்ளதாகவும், அந்த உற்பத்திகளின் செலவும் அதற்கேற்ப உயர் மட்டத்தில் காணப்படுவதால், கட்டம் கட்டமாக செஸ் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, முதற்கட்டமாக இடைநிலைப் பொருட்களுக்குச் சலுகைக் காலத்துடன் செஸ் வரி படிப்படியாக நீக்கப்படுவதன் மூலம், உள்நாட்டுத் தொழில்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் முறையான உற்பத்திச் செயல்பாட்டிற்கு உற்பத்தியாளர்களைப் பழக்கப்படுத்துவதற்கான திறனையும், அவர்களுக்கு அவசியமான மூலப்பொருள் செலவைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்கும் அணுகுமுறையையும் அரசாங்கம் இதன் மூலம் எதிர்பார்க்கிறது.
இதற்கமைய செஸ் வரியை நீக்குவதுடன் புதிய சுங்கவரி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்கமைய 4 பிரிவுகளின் கீழ் அந்தச் சுங்கவரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த 4 பிரிவுகளின் கீழ் 0%, 10%, 20% மற்றும் 30% என்ற அடிப்படையில் புதிய சுங்கவரி அறிமுகப்படுத்தப்படும் எனவும், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திகளுக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0% வீதமும், முடிவுற்ற பொருட்களாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரை புதிய சுங்கவரி விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாப்பதனை இந்த வேலைத்திட்டத்தின் மூலம் அரசாங்கம் மேலும் எதிர்பார்க்கிறது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.




