இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: 72,000-ஐக் கடந்த நோயாளிகள்!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (15) மாத்திரம் 1,195 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியாக அதிகளவான பாதிப்புகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன, அங்கு 38,160 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஏனைய மாகாணங்களில் தென் மாகாணத்தில் 11,274 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 பேரும், மத்திய மாகாணத்தில் 6,026 பேரும் பதிவாகியுள்ளனர். மேலும், ஜூலை மாதத் தரவுகளின்படி கம்பஹா மாவட்டத்தில் 15,082 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.




