2026 September 10, Thursday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 30° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
சட்டவிரோத சொத்து விசாரணையில் ரூ.100 மில்லியன் வீடுகள் சிக்கின!வடக்கு, கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் விசேட சந்திப்பு!தேர்தல் நடத்தப்படாவிட்டால் கடுமையான முடிவு – எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை!ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு செல்லாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!ஈரான் கடலோரப் பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் – மத்திய கிழக்கில் பதற்றம் உச்சம்!மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத்தை இழந்த இலங்கை – 20 மில்லியன் டொலர் வருவாய் பாதிப்பு!சிறைக் கொடுமைகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடுத்த சோதனை – IMF குழு இலங்கையில்!

தேர்தல் நடத்தப்படாவிட்டால் கடுமையான முடிவு – எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை!

அரசியல்September 10, 2026 · 2 hours முன்5
தேர்தல் நடத்தப்படாவிட்டால் கடுமையான முடிவு – எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை!

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. அவர்கள், பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது எனத் தெரிவுக்குழுவிடம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான முன்மொழிவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்துள்ளது. அதில் பெண்களுக்கு 25 சதவீத உத்தரவாத பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளடங்கியுள்ளது.

அதேவேளை, மற்றுமொரு சட்டரீதியான வழிமுறையும் நாடாளுமன்றத்தின் முன் உள்ளது. சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி. அவர்களால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினர் சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது. பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், அந்தச் சட்டமூலத்தை முன்னெடுத்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை உருவாக்க முடியும்.

எனவே, தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறை மற்றும் சட்டரீதியான தெரிவுகள் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முன் உள்ளன. இனிமேல் தேவையானது மேலும் செயன்முறைகளை நீடிப்பதல்ல; அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஆகும்.

தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழி விஞ்ஞாபனத்தின் 128ஆவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின்றி இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமது பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யும் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது.

எனவே, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான காலவரையறையுடன் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கமும் தெரிவுக்குழுவும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம்.

தெரிவுக்குழு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தீவிரமான அரசியல் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தவறினால், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மிகவும் தீவிரமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அந்தத் தீர்மானம் என்னவென்பதை இவ்வேளையில் வெளிப்படுத்த விரும்பவில்லை.