இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடக்கின்றன : ஜெகதீஸ்வரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன, மத, மொழி வேறுபாடின்றி செயற்படுவதாகவும், ஆனால் தெற்கிலும், வடக்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் செயற்பாடுகள் நடக்கின்றன எனவும் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன, மத, மொழி பேதமற்ற அரசாங்கம் என்பதை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளோம்.
அரசியலுக்கு அப்பால் சென்று நாங்கள் மக்களின் மனங்களை வென்றுள்ளோம் என்பதை கடந்த தேர்தல்களின் மூலம் நிரூபித்துள்ளோம்.
வடக்கு மாகாணத்திற்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதியை ஒதுக்கி உள்ளோம்.
கடந்த அரசாங்கத்தைப் போல் இல்லாமல் நாம் செயற்படுவதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்திற்கு தூபமிடும் அரசியல் செயற்பாடுகள செய்கின்றார்கள்.
நாம் அரசாங்கத்தின் ஊடாக வேலைத்திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கின்றோம்.
அதை சரியாக வழிநடத்த வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையும் ஆகும். தொழில்நுட்ப ரீதியாக அதனை சரியாக அதிகாரிகளே வழிநடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.