2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

VAT பதிவு எல்லை குறைப்பு: மேலும் 10,000 வணிகங்கள் வரி வலையில்!

உள்ளூர்June 23, 2026 · 2 months முன்3
VAT பதிவு எல்லை குறைப்பு: மேலும் 10,000 வணிகங்கள் வரி வலையில்!

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (திருத்தச்) சட்டமூலத்திற்கு (VAT) அரசாங்க நிதி பற்றிய குழுவின் (COPF) அனுமதி கிடைத்துள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குழுவின் கூட்டத்தொடரின் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான விஜேசிறி பஸ்நாயக்க, சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ மற்றும் நிமல் பலிஹேன ஆகியோர் இணையவழி (Online) ஊடாக இணைந்துகொண்டனர். 

2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க வற் (VAT) வரிச் சட்டத்தைத் திருத்தம் செய்யும்போது, வதியாத விநியோகஸ்தர்களால் டிஜிட்டல் தளங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்கான வரிகளை விதிப்பது குறித்து இங்கு அதிக கவனம் செலுத்தப்பட்டது. 

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதிவு செய்யப்பட்டு இந்நாட்டில் இயங்கி வரும் இரண்டு போக்குவரத்துச் சேவை (Ride-sharing) நிறுவனங்களை ஒப்பிட்டுப் சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வரித் திருத்தத்தின் பின்னரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையே சில சமத்துவமின்மைகள் காணப்படுவதாகத் தெரிவித்தார். 

இலங்கையை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தொழில்முனைவோருக்கு உலகளாவிய சந்தையில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் கவலை வெளியிட்டார். 

எவ்வாறாயினும், இந்த வரி முறையானது இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள முறைமைக்கு ஒப்பானது என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

வற் வரி செலுத்துவதற்கான வருடாந்த வருமான எல்லை காலாண்டுக்கு 15 மில்லியன் ரூபாவிலிருந்து 9 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதால், புதிதாக சுமார் 10,000 வணிகங்கள் வற் வரிக்காகப் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். 

மொத்த, சில்லறை மற்றும் அழகுக்கலை உள்ளிட்ட சிறு வணிகங்கள் இயந்திரங்களைப் (POS machines) பெற்றுக்கொள்வதற்காக சுமார் 200,000 ரூபா கூடுதல் செலவை ஏற்க வேண்டியுள்ளமை மற்றும் சட்ட மீறல்களுக்கான அபராதத் தொகை ஒரு மில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து குழுவினர் கேள்வி எழுப்பினர். 

சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு அபராதம் விதிக்காமல், இந்த முறைமைக்கு அவர்கள் பழக்கப்படுவதற்கு ஆதரவளிக்குமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், POS இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர இங்கு குறிப்பிட்டார். 

இந்த வற் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், அதற்கான ஒழுங்குவிதிகளைத் தயாரித்து வெளியிடுவதற்கு முன்னர் மீண்டும் ஒருமுறை அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். 

விசேட பண்டங்கள் வரிச் சட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் இறக்குமதி தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த 2026 மார்ச் 31ஆம் திகதியிட்ட 2482/09ஆம் இலக்க மற்றும் 2026 மே 04ஆம் திகதியிட்ட 2487/02ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. 

இங்கு 2487/02 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சோளத்திற்கான வரி 25 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், மக்களின் புரதக் குறைபாட்டைக் கருத்திற்கொண்டு, சோள வரியை உயர்த்துவதன் மூலம் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளில் ஏற்படும் தாக்கம் குறித்து அவதானம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் குழு கேட்டுக்கொண்டது. 

இதற்கு மேலதிகமாக, 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2026 மே 07ஆம் திகதியிட்ட 2487/29ஆம் இலக்க வர்த்தமானியின் ஒழுங்குவிதிகளுக்கும் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.