நாட்டில் பல கடற்பகுதிகளுக்கு பலத்த எச்சரிக்கை !

நாட்டில் பல கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலவக்கூடும் என இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ் எச்சரிக்கையானது இன்று (22) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட நிலையில், நாளை (23) காலை 10.30 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக புத்தளம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக சிலாபம் வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



