2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

நீதித்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படக் கூடாது – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

உள்ளூர்July 5, 2026 · 1 month முன்1
நீதித்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படக் கூடாது – எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்!

தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். 

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நேற்று (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான பொது மக்கள் கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகியவற்றுடன் சுதந்திர ஊடகங்கள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாடுகளின் ஊடாக ஜனநாயகத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும். 

தற்போது அரசாங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 லிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும் அதிகரிக்க முயற்சித்து வருகின்றது. 

எனினும் இந்த இரு உயர் நீதிமன்றங்களிலும் தலா 8 நீதியரசர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

இவ்வாறான திடீர் அரசியலமைப்புத் திருத்தங்கள் ஜனநாயக முறைமைக்கு மரண அடியையே கொடுக்கப்படுகின்றன. 

இதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு சவால் விடுக்கப்படுவதுடன், அதன் நம்பகத்தன்மை குறித்தும் பல சந்தேகங்களையும் பிரச்சினைகளையும் எழுப்பி நிற்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

20 ஆவது திருத்தத்தின் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 12 லிருந்து 20 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை 11 லிருந்து 17 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

நீதியரசர்களுக்கு தேவைப்பாடு நிலவினால் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நாம் தயாராக இருந்த போதிலும், இவ்வாறான முறையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீதிமன்றத்திற்கான வசதிகளை பெற்றுக் கொடுப்பதாக அமைந்தாலும், இவ்வாறு ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது நீதிமன்றத்தின் நற்பெயரையும் பிம்பத்தையும் கெடுக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.