பாகிஸ்தானில் 5 பேருடன் மாயமான விமானம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப் பயணித்த போயிங் 737 ரக சரக்கு விமானம் ஒன்று திடீரென மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விமானத்தின் வழிகாட்டும் அமைப்பில் (Navigation System) கோளாறு ஏற்பட்டதாக விமானிகள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஐந்து பணியாளர்கள் பயணித்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
‘Flightradar24’ தரவுகளின்படி, கராச்சிக்கு தென்மேற்கே கடல் பகுதியை நெருங்கும்போது விமானம் தனது உயரத்தை அடிக்கடி மாற்றியதும், பின்னர் மிக வேகமாக கீழ்நோக்கி இறங்கியதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் கடலில் விழுந்திருக்கலாம் எனப் பரவலாகச் சந்தேகிக்கப்பட்டாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விமானம் மற்றும் அதில் பயணித்த பணியாளர்களின் நிலை குறித்து மேலதிகத் தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.




