Dec 24, 2025
தொழில்நுட்பம்
வாட்ஸ்அப் மூலம் புதிய வகை மோசடி
நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா?
அப்படியானால், இந்த விடயத்தை நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்
ஏனெனில், வாட்ஸ்அப் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு சைபர் குற்றவாளிகள் புதிய வகை மோசடியொன்றை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய மோசடி முறைக்கு “வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்” (WhatsApp Ghost Pairing) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் இடம்பெறும் இந்த மோசடியில் சிக்காமல் இருக்க, பொதுமக்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என ஹைதராபாத் மாநகர காவல் ஆணையரும், தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநரும் அறிவுறுத்தியுள்ளனர்.
வாட்ஸ்அப் ‘கோஸ்ட் பேரிங்’ மோசடி எவ்வாறு நடைபெறுகிறது?
சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால், குற்றவாளிகளும் மோசடி செய்ய புதிய உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னர், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பி மால்வேர் மென்பொருட்களைப் புகுத்தியோ பல்வேறு மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தற்போது, வாட்ஸ்அப் ‘பேரிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதை காவல்துறை கண்டறிந்துள்ளது.
“ஹேய்… என் புகைப்படத்தைப் பார்த்தாயா?” என்ற வாசகத்துடன் ஒரு லிங்க் அனுப்பப்படுவதன் மூலம் இந்த மோசடி ஆரம்பிக்கப்படுகிறது என ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
“இந்த லிங்க் உங்களுக்கு தெரியாத நபரிடமிருந்து வந்தாலும், அல்லது உங்களுக்கு நன்கு அறிமுகமானவரிடமிருந்து வந்தாலும் கூட, எந்த சூழலிலும் அதைக் கிளிக் செய்ய வேண்டாம்” என அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறான லிங்க் ஒன்றை கிளிக் செய்தவுடன், போலியான வாட்ஸ்அப் வெப் பக்கம் திறக்கப்படும் என்றும், எந்தவிதமான ஒடிபி அல்லது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்வதுமின்றி, பயனரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கரின் சாதனத்துடன் (கணினி, லேப்டாப் அல்லது மொபைல்) தானாகவே இணைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இந்த செயல்முறையின் போது, பயனர்கள் தங்களது சொந்த வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்த முடியாதவாறு முழுமையாக லாக் செய்யப்படுவார்கள் என்றும் சஜ்ஜனார் குறிப்பிட்டார்.
மோசடிகளில் சிக்காமல் இருக்க எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்?
வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு தளங்களை பயன்படுத்தும் போது, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (Links) எவ்வித சூழலிலும் கிளிக் செய்யக் கூடாது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதே கருத்தை ஷிகா கோயல் பிபிசி ஊடகத்திற்கும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அவர் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள முக்கியமான 3 பாதுகாப்பு அறிவுரைகள் வருமாறு:
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள “இணைக்கப்பட்ட சாதனங்கள்” (Linked Devices) என்ற வசதியை அடிக்கடி சரிபார்த்து பார்க்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியாத அல்லது அறிமுகமில்லாத சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தால், உடனடியாக லாக் அவுட் (Log out) செய்ய வேண்டும்.
வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள அக்கவுண்ட் (Account) பிரிவுக்குச் சென்று, “இரண்டு அடுக்கு சரிபார்ப்பு” (Two Step Verification) வசதியை தவறாமல் செயல்படுத்த வேண்டும்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






