Search

sath

Jan 4, 2026

விளையாட்டு

IPL ஒளிபரப்பை நிறுத்த பங்களாதேஷ் முடிவு; உலகக் கோப்பை போட்டிகளை மாற்ற கோரிக்கை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு உத்தரவிட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளார் பங்களாதேஷின் இளைஞர் மற்றும் விளையாட்டு ஆலோசகர் டாக்டர் ஆசிப் நஸ்ருல்.

சனிக்கிழமை தனது உறுதிப்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள டாக்டர் நஸ்ருல், இந்த முடிவு பங்களாதேஷ் கிரிக்கெட்டுக்கு அவமதிப்பாகும் என்றும், இந்தியாவில் பங்களாதேஷ் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நடத்தையைக் குறித்து தீவிரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டு அமைச்சக பொறுப்பில் உள்ள ஆலோசகராக, இந்த விவகாரம் முழுமையாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு (ICC) எழுத்துப்பூர்வமாக விளக்கப்பட வேண்டும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திடம் நான் உத்தரவிட்டுள்ளேன்,” என அவர் கூறினார்.

“ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும் ஒரு பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்தியாவில் விளையாட முடியாத நிலை என்றால், உலகக் கோப்பைக்காக அங்கு செல்லும் முழு பங்களாதேஷ் அணியும் பாதுகாப்பாக உணர முடியாது,” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பங்களாதேஷின் உலகக் கோப்பை போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட வேண்டும் என அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்குமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல், இந்திய பிரீமியர் லீக் (IPL) போட்டிகளை பங்களாதேஷில் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் ஆலோசகருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

“நாடு அல்லது எமது வீரர்களுக்கு எதிரான எந்த அவமதிப்பையும் அரசு பொறுக்காது. பங்களாதேஷ் கிரிக்கெட், கிரிக்கெட் வீரர்கள் அல்லது பங்களாதேஷ் மீது எந்த சூழ்நிலையிலும் அவமதிப்பை ஏற்றுக்கொள்ளமாட்டோம். அடிமைத்தனத்தின் காலம் முடிந்துவிட்டது,” என டாக்டர் நஸ்ருல் வலியுறுத்தினார்.

இதற்கு முன், BCCI-யின் உத்தரவின் பேரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் KKR அணியிலிருந்து நீக்கப்பட்டதாக அந்த அணி உறுதிப்படுத்தியது. ஆனால், இந்த முடிவுக்கான அதிகாரப்பூர்வ காரணம் எதையும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை.

இந்தியா–பங்களாதேஷ் இடையிலான அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் உறவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.

இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All