
sath
Dec 25, 2025
விளையாட்டு
தொடர் தோல்வியில் இங்கிலாந்து; ரவி சாஸ்திரியின் பக்கம் திரும்பும் கவனம்

ஆஷஸ் தொடர் நிறைவடைந்த பின்னர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது .
இந்தச் சூழலில், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது
தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது.
இந்த தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணியின் இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமே காரணம் என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், ‘பேஸ்பால்’ (Bazball) உத்தியை அணியில் நடைமுறைப்படுத்தினார்.
இந்த உத்தியின் கீழ் நடைபெற்ற முதல் 11 போட்டிகளில், இங்கிலாந்து அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றது.
ஆனால், அதே உத்தி தற்போது இங்கிலாந்து அணிக்கே பெரும் சவாலாக மாறியுள்ளது.
எதிரணிகள் அந்த உத்திக்கு தங்களை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், இங்கிலாந்து அணியின் இந்த அணுகுமுறை தோல்வியடைந்தது.
இதன் விளைவாக, அடுத்த 33 போட்டிகளில் இங்கிலாந்து அணி 16 வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது.
முன்னாள் வீரர்கள் உட்பட பலரும், இந்த முறையை கைவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டின் இயல்புக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என வலியுறுத்தினர்.
எனினும், இந்த ஆலோசனைகள் அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்து அணி தற்போது ஆஷஸ் தொடரையும் இழந்துள்ளது.
இந்த நிலையிலேயே, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது பதவியிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மாண்டி பனேசர், அவுஸ்திரேலிய அணியின் பலவீனங்களை நன்கு அறிந்த ஒருவருக்கே இந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்தகையவராக ரவி சாஸ்திரியே சிறந்த தேர்வு எனத் தெரிவித்த அவர்,
இந்திய அணி அவரது தலைமையில் இரண்டு முறை அவுஸ்திரேலியாவை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தி வரலாற்று வெற்றிகளைப் பெற்றது என்றும் குறிப்பிட்டார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






