
puja
Aug 1, 2026
உள்ளூர்
வடக்கின் வளர்ச்சிக்கு பலாலி முக்கிய மையம்!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்திப் பணிகளை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
வட மாகாணத்தின் விமானப் போக்குவரத்து மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இதன்போது, பயணிகள் புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டங்கள், புதிய கட்டிட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை பெற்றுக்கொண்டார்.
அதேவேளை, திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் அதிகளவிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை கையாளக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் உயர்தரத்தில் அமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்தி, வடக்கு மக்களுக்கும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் சிறந்த விமானப் போக்குவரத்து சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. அந்தக் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, புதிய அரசாங்கத்தின் முன்னுரிமை அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு பகுதியாக விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர், வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை, முதலீட்டு வாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணிகளுக்கான சேவைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





