ரஷ்ய இராணுவ விமானம் விபத்தில் 29 பேர் பலி !

கிரிமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரொய்டர்ஸ் ஊடகத்தில் வெளியாகிய செய்திகளின் படி, நேற்று மொஸ்கோ நேரப்படி மாலை 6 மணியளவில் கிரிமியன் தீபகற்பத்தின் வான்பரப்பில் திட்டமிடப்பட்ட பயணத்திலிருந்த குறித்த வானூர்தி, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில், வானூர்தி விபத்துக்குள்ளான சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.விபத்துக்குள்ளான வானூர்தியில் 6 விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் என மொத்தம் 29 பேர் பயணித்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




