2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

விளையாட்டுFebruary 19, 2026 · 6 months முன்0
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 38-வது லீக் போட்டியில் (குரூப் பி) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (19) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

‘குரூப் பி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய இரு அணிகளுமே, பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றி ஏற்கனவே ‘சுப்பர் 8’ சுற்றுக்கான தகுதியை உறுதி செய்துள்ளன.

எனவே, எவ்வித அழுத்தமுமின்றி இன்றைய போட்டியில் வெற்றிபெற்று தமது பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன.

சொந்த மண்ணில் விளையாடும் இலங்கை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் (ஓமன், அயர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா) அபார வெற்றி பெற்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம் வருகிறது.

குறிப்பாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் சதம் விளாசிய பெத்தும் நிஸ்ஸங்க சிறப்பான ஃபார்மில் உள்ளார்.

அதேவேளை, உபாதைக்குள்ளாகித் தொடரிலிருந்து வெளியேறியுள்ள வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்குப் பதிலாக டில்ஷான் மதுஷங்க இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

மறுபுறம், அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சித் தோல்வியளித்து வரலாற்றுச் சாதனை படைத்த சிக்கந்தர் ராஸா தலைமையிலான சிம்பாப்வே அணியும், அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்ட போதிலும் சிறந்ததொரு நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தின் ஆடுகளம் வழமைபோலவே சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், இரு அணிகளினதும் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கத்தைச் செலுத்துவார்கள். எனினும், இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இரு அணிகளும் வெற்றி தாகத்துடன் உள்ளதால், சுப்பர் 8 சுற்றுக்கு முன்னரான இந்த முன்னோட்டப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.