மன்னார் நீதிமன்றத்தின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான பிரதான சந்தேக நபர்கள் கைது.

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளடங்களாக இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி (16.01.2025 ) அன்று மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (28)காலை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
இதன்போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள ஒரு விடுதியில் ஒரு கைக்குண்டுடன் மறைந்திருந்த மேற்படி குற்றத்தைத் திட்டமிட்ட பிரதான சந்தேக நபரும்,அவருக்கு உதவிய இருந்த ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 22 மற்றும் 38 வயதுடைய உயிலங்குளத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






