சிறுபோக நெல் கொள்வனவுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு!

2026 சிறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நேற்று (20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தக் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரித்துக்கொள்வதற்கான விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டிற்குள் பயன்படுத்தப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுவதுமான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை நெல் கொள்வனவிற்காகப் பயன்படுத்துவதற்கே இந்த குறைநிரப்பு மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மதியம் 1.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.




