கடற்கொந்தளிப்பு எச்சரிக்கைக்கு மத்தியில் படகு விபத்து – மீனவரை தேடும் பணி தீவிரம்!

கடற்கொந்தளிப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும், கடலில் பயணித்த படகொன்று இன்று (20) அதிகாலை சிலாபம் முகத்துவாரப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவர் சிலாபத்தைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
“ரஷ்மிக புத்தா” என பெயரிடப்பட்ட படகில் இரண்டு மீனவர்கள் சென்றிருந்த வேளையில், காலை 6.00 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து மீனவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதுடன், பின்னர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இரு மீனவர்களும் நேற்றைய தினம் (19) பிற்பகல் 1.00 மணி அளவில் சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன மீனவரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் தற்போது பல மீன்பிடிப் படகுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.
எச்சரிக்கைகள் அமுலில் உள்ள காலப்பகுதியில் மீனவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.




