புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தொடரும் வரி அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரித் திருத்தங்களின் தாக்கம் காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் சிகரெட் தயாரிப்பு 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டுப் பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர இன்று (20) சபை அமர்வில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, வரி கொள்கைகளின் தாக்கம் காரணமாக 2025 ஆம் ஆண்டளவில் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் வருமானத்தை ஈட்டுவதைத் தவிர, புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார சேவைகள் செலவுகள் மற்றும் பிற சமூக – பொரு பொருளாதார எதிர்மறைக் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதே இந்தக் கொள்கையின் பிரதான நோக்கம் என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 தடவைகள் உற்பத்தி வரிகள், பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் நிறுவன வருமான வரி திருத்தப்பட்டுள்ளன.
2023 ஜனவரி 01 மற்றும் ஜூலை 01 ஆகிய திகதிகளில் முறையே 20 வீதம் உற்பத்தி வரிகள் அதிகரிக்கப்பட்டன.
2024 ஜனவரி 01 அன்று பணவீக்கச் சுட்டெண் பொறிமுறையின் கீழ் 14 வீதத்தால் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது.
2025 ஜனவரி 11 அன்று 5.9 வீதத்தால் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது.
2024 ஜனவரி 01 அன்று பெறுமதி சேர் வரி (VAT) 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
2025 ஏப்ரல் 01 அன்று நிறுவன வருமான வரி 40 வீதத்திலிருந்து 45 வீதமாக உயர்த்தப்பட்டது.
புகையிலை மீது அறவிடப்படும் வரித் தொகை (2025 ஜனவரி 11 முதல்):
72 – 84 மில்லிமீற்றர் வரை: 109.95 ரூபா.
67 – 72 மில்லிமீற்றர் வரை: 95.88 ரூபா.
60 – 67 மில்லிமீற்றர் வரை: 69.15 ரூபா.
60 மில்லிமீற்றரைத் தாண்டாதவை: 26.59 ரூபா.
வரிகள் உயர்த்தப்பட்டதன் ஊடாக நேரடி மற்றும் மறைமுக வரி வருமானங்கள் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது மக்கள் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் வருமான முகாமைத்துவத்திற்கும் பங்களித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.




