7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, இன்று (17) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் புளோரஸ் (Flores) பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.
இந்தோனேசியாவில் கடந்த 15ஆம் திகதி ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பல பின்னதிர்வுகளும் ஏற்பட்டன.
இதனால் 53 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த பலரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் 9,200 இற்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
நிலநடுக்கத்தின் பின்னர் அந்நாட்டின் சுற்றுலாப் பகுதிகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையினால் கடல்வழிப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நிலநடுக்கம் காரணமாக குறித்த மாகாணங்களில் மின்தடை ஏற்பட்டிருந்த போதிலும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




