இலங்கை-இந்தியா பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய மீனவ பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையினை அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஒக்டோபர் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று (11) விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் மாவட்ட மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பானது மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அமைச்சர், இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைக்கு நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருக்கின்றது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளால் இலங்கையின் கடல் வளத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது.
இதனால் எமது மீனவர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களையும் எதிர்நோக்குகின்றனர்.
தற்போது நீடித்து வரும் இந்தப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதனடிப்படையில் மூன்று கட்டங்களின் கீழ் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதுடன், முதலாவது பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஒக்டோபர் முற்பகுதியில் நடைபெறும்.
முதற்கட்டமாக இருநாட்டு அதிகாரிகளின் மட்டத்திலான பேச்சுவார்த்தையாக இடம்பெறும் என்பதுடன் அதன்பின்னர் மீனவ சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.