மீனவர்களுக்குக் கடற்றொழில் திணைக்களத்தினால் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்களின் பாதுகாப்பிற்காகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், கரையோரப் பகுதிகளில் சிறிய மற்றும் பாரம்பரியப் படகுகள் கடலுக்குச் செல்வது உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கனவே கடலுக்குச் சென்றவர்கள் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறும், தொழிலில் ஈடுபடும்போது கட்டாயமாகப் பாதுகாப்பு அங்கிகளை அணிவதுடன், படகுகளின் தொழில்நுட்பப் பாதுகாப்பை உரிமையாளர்கள் உறுதிப்படுத்துமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.




