வடக்கு மாகாணத்தின் மூன்று தீவுகள் ‘பசுமை சக்தித் தீவுகளாக’ மாற்றம்!

வடக்கு மாகாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளையும் ‘பசுமை சக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தத் தீவுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (HRES) திட்டங்களை மையமாக வைத்தே இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீள ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இவற்றுடன், கெரவலப்பிட்டிய – கொழும்பு துறைமுகம் மின்சாரப் பரிமாற்றக் கோடு, சம்பூர் – கப்பல்துறை மின்சாரத் திட்டங்கள் மற்றும் கூரை மேல் சூரிய சக்தித் திட்டம் போன்ற நாட்டின் முக்கிய மின்சாரத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.




