2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

உள்ளூர்February 1, 2026 · 7 months முன்2
ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?  தம்புள்ளை வர்த்தகர்கள் கேள்வி!

நாட்டின் முன்னணி பொருளாதார மத்திய நிலையங்கள் ஐந்தினை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து நீக்கி, தனியானதொரு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகப் பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக நிலைய உரிமையாளர்கள், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கு அறிவித்துள்ளனர். 

நேற்று (31) பிற்பகல் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். 

புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, 7 பணிப்பாளர்களை நியமித்து, தற்போது முகாமைத்துவ நிதியத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் நாட்டின் ஐந்து பொருளாதார மத்திய நிலையங்களை இந்த நிறுவனத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் விடயத்திற்குப் பொறுப்பான பிரதி அமைச்சர் சுனில் பியன்வில, அரச அதிகாரிகள், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலைய முகாமைத்துவ நிதியத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். 

இதன்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க அவர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வர்த்தகச் சமூகத்தினர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவிக்கையில், இந்த வர்த்தக நடவடிக்கைகள் 35 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்ட ஒரு நிறுவனம் என்று கூறினர். 

அதேபோன்று, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அமைச்சருக்குத் தேவையான குழுக்களை நியமித்துத் தமது வர்த்தக நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். 

வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் வசந்த சமரசிங்க, புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகித்து, மக்களுக்கு மிக நியாயமான சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். 

அதற்கமைய தம்புள்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பெட்டிபொல, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை இந்தப் புதிய நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து, அவற்றின் மூலம் கிடைக்கும் மாதாந்த வாடகை மற்றும் நிர்வாகப் பணம் அனைத்தும் அடுத்த மாதம் முதல் இந்த நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். 

இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் உரிமைகள் எவ்விதத்திலும் பறிக்கப்படாது என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், அமைச்சரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த வர்த்தகச் சமூகம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, எவ்வித ஆராய்வும் இன்றி புதிய நிறுவனமொன்றை ஸ்தாபித்து, தாம் நடத்தி வந்த வர்த்தகத்தை ஒப்படைக்க முடியாது என்றும், தற்போது மிகவும் பலமான முகாமைத்துவ நிதியத்தின் ஊடாக 30 வருடங்களுக்கும் மேலாகப் பொருளாதார மத்திய நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

மேலும், பொருளாதார மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய வர்த்தகச் சமூகத்தினர், அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரை மிகவும் சூட்சுமமான முறையில் மாற்றி, புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தினர். 

இதற்காக எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை என்றும் அவர்கள் அமைச்சரிடம் குற்றம் சாட்டினர். 

அதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் 29 வருட காலப்பகுதியில் அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொண்டு, தற்போதும் முகாமைத்துவ நிதியத்தில் 25 கோடி ரூபா பணத்தைச் சேமித்துள்ளதாகவும் அவர்கள் அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினர். வர்த்தகச் சமூகம் விவசாய மக்களுக்கு வட்டியில்லாக் கடன், விதை உள்ளிட்ட மரக்கறிச் செய்கைக்கான செலவுகளை மேற்கொண்டு இந்தப் பொருளாதார மத்திய நிலையத்தைப் பராமரித்து வருவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் எவ்விதத்திலும் தெரியாத நிறுவனமொன்றுக்குத் தமது உரிமையை வழங்கத் தயாரில்லை என்றும் வர்த்தகச் சமூகம் அமைச்சரிடம் தெரிவித்தது. 

இதற்கு அமைச்சரும் பதில் வழங்க முற்பட்டபோது, வர்த்தகர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்புள்ளைக்கு வந்து, தேர்தல் வாக்குறுதியாக 30 வருட குத்தகை ஒப்பந்தத்தைப் பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்களுக்கு வழங்குவதாகக் கூறியதையும் வர்த்தகர்கள் அமைச்சரிடம் நினைவுகூர்ந்தனர். 

எனினும், அதற்கு எவ்வித பதிலையும் வழங்க அமைச்சர் இதன்போது முற்படவில்லை. 

எவ்வாறாயினும், அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனம் மற்றும் வர்த்தகர்கள் நீதிமன்ற நடவடிக்கை எடுத்துள்ள வர்த்தகப் பெயர் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிறுவனத்தின் பெயர் பின்னர் மாற்றப்பட்டதாகவும், அதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

எப்படியிருப்பினும், வர்த்தகச் சமூகத்திடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக, இது குறித்துத் தொடர்ந்தும் பரிசீலித்து, நிறுவனம் மற்றும் வர்த்தகச் சமூகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்துக் கலந்துரையாடத் தான் எதிர்காலத்தில் திகதி ஒன்றை வழங்குவதாக அமைச்சர் தெரிவித்தார்.