2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

உலக சுனாமி அனர்த்த விழிப்புணர்வு தினம் இன்று

உள்ளூர்November 5, 2025 · 9 months முன்0
உலக சுனாமி அனர்த்த விழிப்புணர்வு தினம் இன்று

உலக சுனாமி அனர்த்த விழிப்புணர்வு தினத்துடன் இணைந்த இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி (IOWave) இன்று காலை 8.30 மணிக்கு நான்கு மாவட்டங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி ஒரு ஒத்திகை நிகழ்ச்சி மட்டுமே என்றும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பாக வலியுறுத்தினார்.

இதன்படி, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதுடன், இன்றைய தினம் உண்மையான சுனாமி நிலைமை ஏற்பட்டால், இந்த நிகழ்ச்சி உடனடியாக நிறுத்தப்பட்டு, அது தொடர்பில் மக்களுக்கு விரைவாக அறிவிக்க தேவையான உத்தியோகபூர்வ தேசிய சுனாமி எச்சரிக்கை மற்றும் பதில் பொறிமுறைகளை செயற்படுத்தி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யுனெஸ்கோ உத்தியோகபூர்வ வழிகாட்டல்களைப் பின்பற்றி நடத்தப்படும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை மேற்பார்வையிட இரண்டு சர்வதேச மேற்பார்வையாளர்கள் கலந்துகொள்வதாகவும், சுனாமி அனர்த்தத்திற்கு தயாரான நாடாக இலங்கை பெயரிடப்படுவது ஒரு வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள 28 நாடுகள் இன்று இந்த நிகழ்ச்சியை அமுல்படுத்தவுள்ளதாகவும், சுமாத்திரா பிராந்தியத்தை பாதிக்கும் சுனாமி நிலமைகளுக்கு இலங்கை எவ்வாறு பதிலளிக்கிறது என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் முன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுனாமி ஒத்திகை நடைபெறும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் வீதிகள் மூடப்படாது என்றும், தேவையற்ற போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சரிபார்த்தல் மற்றும் பலப்படுத்துதல், நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை செல்லுபடியாக்குதல் மற்றும் சமூகம் மற்றும் முதல் பதிலளிப்பவர்களுக்கு இடையேயான தயார்நிலையை மேம்படுத்துதல் என்பன இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கங்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.