அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இன்னும் இறுதி முடிவு இல்லை!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நிஹால் அபேசிங்க, கட்சி இன்னும் சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இதில் ஒரு தார்மீகப் பிரச்சினை இருப்பதை நாங்கள் அறிவோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் வரும் ஏப்ரல் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.




