2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 32°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கிழக்கில் காணி ஆக்கிரமிப்புக்கு கடும் நடவடிக்கை

உள்ளூர்May 23, 2026 · 3 months முன்2
கிழக்கில் காணி ஆக்கிரமிப்புக்கு கடும் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி கிழக்கு மாகாணத்தில் பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் பிராந்தியத்தில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என அவர் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் சட்டவிரோத காணி நிரப்புதல் மற்றும் அத்துமீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்திய ஜனாதிபதி, இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முழுமையாகத் தடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மஹாவலி அதிகார சபையினால் ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இதுவரை எந்தவொரு திட்டமும் முன்னெடுக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள வணிக மதிப்புமிக்க காணிகளை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த காணிகள் அனைத்தும் மாவட்டச் செயலாளர்கள் அல்லது பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, பொதுமக்களின் நலனுக்காக முறையான திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.