2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முருங்கை விதைகளின் புதிய கண்டுபிடிப்பு : மைக்ரோபிளாஸ்டிக் நீக்கும் இயற்கை தீர்வு!

ஆரோக்கியம்April 30, 2026 · 4 months முன்2
முருங்கை விதைகளின் புதிய கண்டுபிடிப்பு : மைக்ரோபிளாஸ்டிக் நீக்கும் இயற்கை தீர்வு!

“அதிசய மரம்” என அழைக்கப்படும் முருங்கை மரத்தின் விதைகளுக்கு, குடிநீரில் உள்ள PVC மைக்ரோபிளாஸ்டிக் (நுண்பிளாஸ்டிக்) துகள்களை 98.5% வரை அகற்றும் தனித்துவமான திறன் உள்ளதாக பிரேசில் மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டறிந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின்படி, நீரைச் சுத்திகரிப்பதற்காகத் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களுக்கு இணையான வினைத்திறனுடன் முருங்கை விதைகள் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முருங்கை விதைகள் ஒரு “உறைவியாக” (Coagulant) செயற்பட்டு, நீரில் உள்ள சிறிய மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை ஒன்றோடொன்று ஒட்டச் செய்கின்றன. இதன் மூலம் அத்துகள்கள் பெரியதாகி எளிதில் வடிகட்டி அகற்றக்கூடிய நிலைக்கு மாறுகின்றன.

நீரில் பரவலாகக் காணப்படும் தீங்கு விளைவிக்கும் PVC மைக்ரோபிளாஸ்டிக்குகளை அகற்றுவதில் ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதுடன், மனிதத் தலைமுடியின் தடிமனில் நான்கில் ஒரு பங்கு அளவுள்ள மிகச் சிறிய துகள்களைக் கூட இதன் மூலம் அகற்ற முடிந்துள்ளது.

தற்போது பயன்படுத்தப்படும் ‘அலுமினியம் சல்பேட்’ போன்ற இரசாயனப் பொருட்களைப் போலன்றி, முருங்கை விதைகள் இயற்கையாகவே மட்கக்கூடியவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு நச்சுத்தன்மையற்றவை. அலுமினியம் அதிகளவில் உடலைச் சென்றடைவது நரம்பியல் நோய்கள் ஏற்படக் காரணமாகலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஒரு முருங்கை விதை மூலம் சுமார் 10 லீட்டர் நீரைச் சுத்திகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நகரங்களின் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு அதிக அளவிலான முருங்கை விதைகள் தேவைப்படும் என்பதால், இந்த முறையானது தற்போது சிறிய சமூகங்களுக்கு அல்லது இரசாயனப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளச் சிரமமான பகுதிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

உலகளாவிய ரீதியில் சுமார் 83% குழாய் நீரில் மைக்ரோபிளாஸ்டிக் அடங்கியுள்ளமை 2024 ஆம் ஆண்டு ஆய்வொன்றில் தெரியவந்துள்ள பின்னணியில், இவ்வாறான இயற்கையான தீர்வொன்றைக் கண்டறிவது சுகாதாரத் துறையில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. எதிர்கால ஆய்வுகள் மூலம் ஏனைய பிளாஸ்டிக் வகைகள் மற்றும் மிகச் சிறிய ‘நானோபிளாஸ்டிக்குகளை’ (Nanoplastics) அகற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படவுள்ளன.