2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

உள்ளூர்December 6, 2025 · 8 months முன்1
வெள்ள நிவாரணக் கொடுப்பனவில் எந்தவித ஊழலுக்கும் இடமில்லை

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா கொடுப்பனவில் எவ்வித ஊழலும் இடம்பெற இடமளிக்கப்படமாட்டாதென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபாய் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிகளில் உள்ளடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் 25,000 ரூபா பெறுவதற்குத் தகுதியான குடும்பங்களைத் தெரிவு செய்கின்றபோது, அவர்களது விபரங்களைக் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றில் காட்சிப்படுத்துமாறு அறிவித்துள்ளோம்.

இந்தக் கொடுப்பனவுகளில் குளறுபடிகளோ, மோசடிகளோ அல்லது ஊழல்களோ இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.