
admin
Jun 1, 2026
உள்ளூர்
தேர்தல் நிதி வேறு தேவைக்கு மாற்றப்பட்டதா? அரச நிதிக்குழு விசாரணை நடத்த மனோ கணேசன் அவசர கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேறு தேவைகளுக்காக மறுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழு விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிற்கு, இன்று (01) திகதியிட்டு மனோ கணேசன் அனுப்பியுள்ள கடிதத்தில்,
மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அரசாங்கத்தினால் அனர்த்த மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்திருந்த கருத்துக்களை மனோ கணேசன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்குத் தெரிந்தவரை, இத்தகைய நிதியை வேறு செலவினத் தலைப்புகளுக்கு மாற்றுவதற்கோ அல்லது மறுஒதுக்கீடு செய்வதற்கோ நாடாளுமன்றம் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரில்வின் சில்வாவால் கூறப்பட்ட இந்த அறிக்கை துல்லியமானது எனின், அது நாடாளுமன்ற அனுமதியின்றி பொது நிதியை அங்கீகரிக்கப்படாத வகையில் பயன்படுத்தியமையைக் குறிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, தேர்தல் நிதியை மாற்றுவது, மறுஒதுக்கீடு செய்வது அல்லது செலவிடுவது போன்ற நடவடிக்கைகள் நாடாளுமன்ற அங்கீகாரம் மற்றும் நிதி விதிமுறைகளை மீறி நடந்துள்ளதா என்பதை அரச நிதி பற்றிய குழு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதோடு இந்த குழு தனது அதிகார வரம்பிற்குள் இதற்குரிய தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






