
janani
Jun 7, 2026
உலகம்
ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஈரான் அனுப்பியதாகக் கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் அமெரிக்கப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் கடலோர ரேடார் மற்றும் கண்காணிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
பிராந்திய கடல்சார் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக 4 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணைக்கு அண்மையில் உள்ள கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் அமைந்திருந்த கண்காணிப்பு தளங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா பதற்றத்தை குறைப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
மேலும், தமது அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றதாகக் கூறப்படும் 4 எண்ணெய் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வந்த 7 ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலால் சில சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பஹ்ரைனிலும் அவசர எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த புதிய பதற்றம், சர்வதேச சமூகத்தின் கவனத்தை மீண்டும் அந்தப் பிராந்தியத்தின் மீது திருப்பியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





