Search

puja

Jul 26, 2026

உள்ளூர்

விடுவிக்கப்படாத வாகனங்கள் டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படலாம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1,025 வாகனங்களை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

 

அவற்றில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாகின்றன என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

குறித்த வாகனங்களில் எந்தவிதமான சுங்கக் குற்றங்களும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதன்படி, எவ்வித சுங்கக் குற்றங்களும் இன்றி விடுவிக்கப்படாத வாகனங்களைச் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 129 ஆவது பிரிவுக்கு அமைவாக ஏலம் விடுவதற்கோ அல்லது டெண்டர் கோரி விற்பனை செய்வதற்கோ எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு பொருளையும் ஒரு மாதத்திற்குள் அதற்குரிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுவித்துக்கொள்ள வேண்டும்.

 

அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த சட்டத்தின் கீழ் அவற்றை விற்பனை செய்து, அந்தப் பணத்தின் மூலம் அரசாங்கத்திற்குத் தேவையான வரித் தொகையை அறவிட்டுக்கொள்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

உரிய வரிகளைச் செலுத்திய பின்னர் எஞ்சியிருக்கும் தொகையைக் கொண்டு துறைமுக மற்றும் களஞ்சியக் கட்டணங்களைச் செலுத்த முடியும்.

 

அக்கட்டணங்களைச் செலுத்திய பின்னரும் எஞ்சியத் தொகை ஏதேனும் இருப்பின், அதனைத் தொடர்புடைய இறக்குமதியாளருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை எனில், அது குறித்து துறைமுகக் கட்டுப்பாட்டாளர் இலங்கைச் சுங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.

 

தற்போது வரை விடுவிக்கப்படாத வாகனங்கள் குறித்துத் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய எதிர்காலத்தில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

இருப்பினும், நியாயமான காரணத்தினால் குறித்த வாகனங்களை விடுவித்துக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஏதேனும் இறக்குமதியாளர் அறிவிக்கும் பட்சத்தில், அது குறித்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது என இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All