
puja
Jul 26, 2026
உள்ளூர்
மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் காரணமாக நேற்று சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலொன்ன, வெலிகட, தம்புள்ளை மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று இரவில் கொலொன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேல்ல ஊருபொக்க வீதியின் தித்தலதென்ன பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் படுகாயமடைந்த இரு ஓட்டுனர்களும் ஓமல்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹால்பந்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவராவார்.
நேற்று அதிகாலை வேளையில் வெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹ சந்தி மற்றும் ராஜகிரிய இடைப்பட்ட வீதியில், ராஜகிரிய நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறுவன் ஒருவன் எதிர் திசையில் வந்த கார் ஒன்றில் மோதியதில் படுகாயமடைந்து IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மீகொட பகுதியைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் ஆவான். விபத்தையடுத்து காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வெலிகட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை - கண்டி பிரதான வீதியின் கபுவத்த சந்திக்கு அருகில் தம்புள்ளை நோக்கிப் பயணித்த டிப்பர் ரக லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
இதன்போது பாதசாரிப் பெண் ஒருவர் மற்றும் இரு சிறுவர்கள் மீது லொறி மோதி விபத்துக்குள்ளானது. காயமடைந்த மூவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பெண் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கபுவத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் ஆவார்.
இதேவேளை, புளியங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 பிரதான வீதியின் பூதூர் பகுதியில் வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிப் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் பயணித்த பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் உலுக்குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார். இச்சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





