SEGU
Nov 15, 2025
உலகம்
டெல்லியில் வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 3000 ஆயிரம் கிலோகிராம் வெடிப்பொருளின் ஒரு தொகுதி பொலிஸ் நிலையத்திற்குள் வெடித்து சிதறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் திகதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் பொலிஸார் நடத்திய சோதனையில் 3000 கிலோகிராம் அமொனியம் நைட்ரைட் என்ற வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முஸமில் ஷகீல் கனியா என்ற நபரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீரின் நவ்காம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தடயவியல் குழு, பொலிஸார் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 27க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், மீண்டும் வெடிபொருள் வெடித்து 7 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








